Sunday, July 12, 2009

"பிரிகேடியர் பால்ராஜ்!"-மேலும் சில நினைவுகள்...




லீமாவின் குரல் கேட்டால் போராளிகளுக்கு எங்கிருந்தோ ஒரு உற்சாகம் பிறந்துவிடும். யாராலும் எதனாலும் அசைக்க முடியாத அசாத்தியமான துணிச்சல் பிறக்கும். எந்த நெருக்கடியான, அபாயம் நிறைந்த சூழ்நிலையிலும் லீமாவின் குரலைக் கேட்டால் போதும், அவர்கள் அந்த நெருக்கடியையோ அபாயத்தையோ மறந்து விடுவார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தவும் மாட்டார்கள். இப்படியே சொல்லிக் கொண்டு போகிறார் ஒரு பெண் போராளி பிரிகேடியர் பால்ராஜைப்பற்றி.


இங்கே லீமா என்று அவர் குறிப்பிடுவது பிரிகேடியர் பால்ராஜையே. லீமா என்பது அவருடைய சங்கேதப் பெயர். போராளிகளிடத்தில் இந்தப் பெயர் ஒரு மந்திரச் சொல். பால்ராஜ் என்ற பெயர் விடுதலைப்புலிப் போராளிகளுக்கு கடந்த இரண்டு தசாப்தங்களாக ஒரு ஆயுதமாகவே இருந்திருக்கிறது. அவர்களுடைய உளவியலில் இந்தச் சித்திரம் அப்படித்தான் பதிந்திருந்தது. அந்த அளவுக்கு அவர் புலிகளின் உளவுரணை வடிவமைத்திருந்தார். அல்லது புலிகளின் உளவுரணை வடிவமைக்கும் படியான ஒரு குறியீடாக காணப்பட்டார். இதற்காக அவர் தன்னை கடுமையான போர்க்கள வாழ்வில் ஈடுபடுத்தி இந்தப் புள்ளியைத் தொட்டிருந்தார். பால்ராஜின் போர்க்கள வாழ்வு அல்லது அதன் சாதனைகள் இந்திய இராணுவக் காலத்தோடு ஆரம்பித்தது. அப்போது அவருக்கு வயது, இருபத்தி இரண்டு. பதினெட்டு வயதில் போராட்டத்தில் இணைந்தவர் பால்ராஜ். அவருடைய கிராமம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கேயுள்ள கடலோரக்கிராமம், கொக்குத்தொடுவாய். மிகவும் பின் தங்கிய கிராமம்.

போதாக்குறைக்கு எப்போதும் சிங்களக் குடியேற்ற வாசிகளின் அச்சுறுத்தல் வேறு. கடற்றொழிலிலும் விவசாயத்திலும் அங்குள்ள மக்கள் ஈடுபட்டாலும் சிங்கள அச்சுறுத்தல் அவர்களை எப்போதும் பாதித்தது. இந்த நிலையில்தான் பால்ராஜ் தன்னைப் போராட்டத்துடன் இணைத்திருந்தார். மிக இளைய வயதில் அவர் தன்னுடைய போர்க்கள அனுபவங்களைத் திரட்டத் தொடங்கிவிட்டார். புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கு பொதுவாகவே போர்க்கள அனுபவம் எப்போதும் பலமானது. அத்துடன் வளமானதும் கூட. அத்தகைய ஒரு வாய்ப்பினுடாக பால்ராஜ் தனக்கு கிடைத்த களத்தைப் பயன்படுத்தி தன்னை வளர்த்தார். இந்திய இராணுவக்காலத்திலேயே அவர் தலைவர் பிரபாகரனின் கவனத்தை ஈர்த்தார் என்று புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் சொல்கிறார்.

இந்திய இராணுவக்காலத்தில் மணலாற்றிலே தலைவருக்கு குறிவைத்து அல்லது அவருக்கான விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்ட பால்ராஜைக் குறிவைத்து இந்திய இராணுவத்தின் பரா துருப்பினர் ஒரு வழிமறிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர். அந்தப் பரா துருப்பினரின் வழி மறிப்புத் தாக்குதலில், அவர்களால் அமைக்கப்பட்ட அந்தக் கொலை வலயம் என்று கூறப்படுகின்ற அந்தச் சூட்டு வலயத்துக்குள்ளே பால்ராஜும் அவரது அணியினரும் அகப்பட்டு விட்டனர். அந்த வேளையில் அவர் உடனடியாக ஒரு முறியடிப்புத் தாக்குதலை துணிகரமாக மேற்கொண்டார். இவர்களைக் குறிவைத்து அந்த இடத்திலேயே நிலைகொண்டிருந்த பராத்துருப்பினர் அழித்தொழிக்கப்பட்டனர். உண்மையிலேயே கொலை வலயத்துக்குள் அகப்பட்டு விட்ட ஒரு அணியானது அந்தப் பதுங்கித் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்வது அரிதான விடயம். ஆனால், இங்கு அவர், தான் தப்பித்துக் கொண்டது மட்டுமல்லாது தங்களைக் கொல்ல வந்த அந்தப் பரா அணியினரை முறியடிப்புத் தாக்குதலில் அழித்தொழித்தார்.


தலைவரின் பால்ராஜ் மீதான கவனத்தை அந்தத் தாக்குதல்தான் பெறவைத்தது. அதுவே அவரை அடையாளம் காண வைத்தது அன்று.ஆனால், பால்ராஜின் கொடி பறக்கத் தொடங்கிய காலம் 1990களில்தான். இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தை விட்டுப் போனபின்னர் மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியது. அப்போது வன்னியைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் பால்ராஜ் ஈடுபட்டார். வன்னியில் அங்கும் இங்குமாக கேந்திர நிலைகளில் மையங்கொண்டிருந்த சிறீலங்கா இராணுவத்தினரின் படை முகாம்களை பால்ராஜ் தலைமையிலான புலிகள் அணிகள் துடைத்தழிக்கத் தொடங்கின. அதுவரையுமில்லாத அளவுக்கு தொடர்ச்சியாக வன்னியில் பல முகாம்கள் புலிகளிடம் வீழ்ச்சி கண்டன. அவ்வாறு படைமுகாம்கள் வீழ்ச்சியடையும் தாக்குதல்களை பால்ராஜே வழிநடத்தியிருந்தார். இதில் என்ன விசேசம் என்றால், இந்தத் தாக்குதல்களை அவர் முற்றிலும் வேறான முறையில் நடத்தியதே. 'புல்டோசர்' பாணியிலான ஒரு வகை நடவடிக்கையாக அவர் இந்தத் தாக்குதல்களை நடத்தியிருந்தார். அப்படியே பெரும்புயலாகவோ அல்லது பேரலையாகவோ படையணி அல்லது போராளிகள் அடித்துக் கொண்டு உள்ளே இறங்கி முகாமையும் படையினரையும் சுத்தப்படுத்தும் நடவடிக்கை அது. இதில் முக்கியமானது மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல். தலைவர் பிரபாகரன் எதை எதிர்பார்த்தாரோ அதை பால்ராஜ் நிறைவேற்றினார். பிரபாகரனின் கனவுக்கு நல்ல வடிவத்தைப் பால்ராஜ் கொடுத்தார் எனலாம். மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் போராளிகளிடத்தில் பால்ராஜின் பெயரை ஆழமாக ஊன்றியது. பொது மக்களிடத்தில் சடுதியாக அந்தப் பெயர் மிகப் பிரபலமாகியது. அதேவேளை படையினர் மத்தியில் பால்ராஜ் என்ற பெயர் மிகப் பயங்கரமான ஒன்றாகியது. அதுவே அவர்களின் பல தோல்விகளுக்கும் புலிகளின் பெரும் வெற்றிகளுக்கும் காரணமாகியது பின்னாளில். படை வல்லுநர்கள், ஆய்வாளர்கள் எல்லோருக்கும் பால்ராஜ் ஒரு ஆச்சரியமாகவும் வியப்பூட்டும் தளபதியகவும் மாறினார். அந்த வியப்பு இன்னும் மாறவில்லை.இப்படி நிகழத் தொடங்கிய பால்ராஜின் போர்க்கள அனுபவங்கள் பிறகு இன்னும் இன்னும் வெவ்வேறு களங்களில் வெவ்வேறான அம்சங்களோடு விரிந்தன.
அதைப் பட்டியலிட்டால் அது இங்கே பெரும் பரப்பாக விரியும். கடந்த இருபது ஆண்டுகால புலிகளின் போர்க்களச் சாதனைகளில் பூநகரிப் படை முகாம் தாக்குதலைத் தவிர ஏனைய பெரும்பாலான களச்சாதனைகளில் பால்ராஜ் முதன்மைப் பாத்திரத்தில் கலந்திருக்கிறார். பூநகரித் தாக்குதலை புலிகள் மேற்கொண்டபோது பால்ராஜ் சிறீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட யாழ்தேவி படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலில் காலில் காயம் பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார்.ஆனால், பால்ராஜின் போர்க்கள சாதனைகளை சரியாக மதிப்பிட்ட தலைவர் பிரபாகரன், புலிகளின் முதலாவது தாக்குதற் படையணியான சார்ள்ஸ் அன்ரனி படையணியின் தளபதியாக நியமித்தார். இது பால்ராஜின் ஆற்றலுக்கும் ஆளுமைக்கும் கிடைத்த நல்ல வாயப்பாகும்.
ஏற்னவே 'புல்டோசர்' வகைத் தாக்குதலை சிறு அணிகளோடு நடத்திச் சாதனைகள் படைத்த அவருக்கு இப்பொழுது இப்படியொரு படையணி கிடைத்தால் எப்படியிருக்கும். பால்ராஜ் அந்தப்படையணியை பிரபாகரனின் விருப்பத்துக்கேற்ற மாதிரியும் தன்னுடைய திட்டத்துக்கு அமைவாகவும் வளர்த்தெடுத்தார். பின்னர் வந்த களமுனைகளில் சார்ள்ஸ் அன்ரனி படையணி பெரும் சாதனைகளை நிகழ்த்தியது. இது புலிகளின் போரியல் வரலாற்றிலும் பெருந்திருப்பங்களை ஏற்படுத்தியது. பால்ராஜ் இவற்றின் மையத்தில் நின்றியங்கினார்.இந்த வளர்ச்சி பால்ராஜை விடுதலைப் புலிகளின் துணைத்தளபதி என்ற நிலைக்கு உயர்த்தியது. தளபதியாக பிரபாகரனும் துணைத்தளபதியாக பால்ராஜும் இருந்தனர் அப்போது. பின்னர் இந்தக் கட்டமைப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் பால்ராஜ் வகித்த அந்தப்பாத்திரத்தை பிறகு எவரும் வகிக்க வில்லை.பால்ராஜின் முக்கிய அம்சம் அவரின் அசாத்திய துணிச்சல்தான். அவருடைய குரலிலேயே அந்த ஆளுமையைக் காணலாம். மிடுக்கான குரல். கட்டளையிடுவது போன்ற பேச்சு. கம்பீரம் தொனிக்கும் சத்தம். அவர் பேசும்போதே இதை யாரும் அவதானிக்கலாம்.
அவரைப் பொறுத்தவரை செய்ய முடியாதது என்று ஒன்றில்லை. அதாவது இராணுவ நடவடிக்கையில் எதனையும் சாதிக்கலாம். அதற்கு எப்போதும் இருக்கவேண்டியது துணிச்சலும் சரியான திட்டமிடலும், தகவலும் இதைச் சரியாக செயற்படுத்தும் ஆளமையும் என்பதே. அப்போது புலிகளின் போர்ச் செயற்பாடுகள் பெரும்பாலும் படை நடவடிக்கைகள் என்ற வகையில் பரிணாமம் பெற்றன. மரபுப் படையணியாக வளர்ச்சி பெற்றிருந்த சார்ள்ஸ் அன்ரனி படையணியும் அதைத் தொடர்ந்து பிற படையணிகளும் இந்த மரபு வழிச் சமர்களில் ஈடுபட்டன.ஆனால், இவை எல்லாவற்றுக்கும் தொடக்கமாக பால்ராஜின் நெறிப்படுத்தலுடன் கூடிய சார்ள்ஸ் அன்ரனி படையணியே இருந்திருக்கிறது.பால்ராஜ் புகழுக்குரிய கீர்த்தி நிரம்பிய படைத்தளபதியாக வளர்ச்சி பெற்றிருந்தார். அவர் நிற்கும் களமுனைகளில் படையினர் - எதிரிகள் உளவியல் ரீதியாக பின்னடைவு நிலையையே கொண்டனர். அவருடைய குரல் படையினரின் உற்சாகத்தில் பாதியைக் கரைத்து விடுவதாக பல படைத்துறை ஆய்வாளர்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் படையினரின் தூக்கத்திலும் பால்ராஜின் எண்ணம் வந்து அவர்கள் தூக்கம் கலைந்ததாகவும் சிறீலங்காப் படைத்தளபதிகளின் கனவுகளில் பால்ராஜே வருவதாகவும் கூட பத்திரிகையாளர்கள் எழுதினார்கள். அந்தளவுக்கு அவர் களமுனையில் சக்தி மிக்கவராக திகழ்ந்தார். இதற்குக் காரணம் பால்ராஜின் அசாத்திய திறன்கள்தான். பொதுவாகவே புலிகளின் தளபதிகள் எல்லோரிடமும் அசாத்திய திறன்கள் உண்டு. அவர்களுடைய உருவாக்க முறைமை அப்படியானது. களத்தில் துணிச்சலை முதன்மைப்படுத்தும் பண்பை அவர்கள் எப்பொழுதும் ஒரு மரபாக பேணியும் தொடர்ந்தும் வருகிறார்கள். இதுவே அவர்களுக்கு அதிக வெற்றியையும் சாதனைகளையும் பெற்றுக் கொடுக்கிறது.
புலிகளின் தாக்குதல் மற்றும் போரியல் விசயங்களை தொடர்ந்து அவதானிப்போர் இவற்றை நன்றாக விளங்கிக் கொள்ளலாம். அநேகமாக புலிகள் தரப்பிலிருந்து தளபதி நிலையிலுள்ளவர்களின் வீரசாவுப் பட்டியல் அதிகமாக இருக்கும். ஆனால், படைத்தரப்பில் இது குறைவு. காரணம் புலிகளின் தளபதிகள் எப்போதும் களத்தில் முன்னுக்கு இறங்குவோராகவும் முன்னின்று போரிடுவோராகவும் இருப்பதே இதற்குக் காரணம். பால்ராஜ் இதில் இன்னும் ஒரு படிமேலானவர். அவர் நிற்கும்போது போராளிகளுக்கு பல மடங்கு பலம் வருகிறது என்றால் அவருடைய படை நடத்தும் பாங்கு ஒருபுறமும், கட்டளையும் முன்னுக்கு நிற்கும் அந்தத் துணிச்சலுமே பிரதானம். இதற்கு ஏராளம் உதாரணங்களுண்டு. குறிப்பாக ஆனையிறவுப் படைத்தளத்தை வெற்றி கொள்வதற்காக பால்ராஜ் ஆயிரத்து இருநாறு போராளிகளோடு படையினருக்குள் ஊடுருவி, கடல் வழியாக தரையிறங்கி போரிட்டமை. யாரும் இத்தகையதொரு தரையிறக்கத்தையோ, படை நடவடிக்கையையோ சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அதைப் பால்ராஜ் செய்தார். அதில் அவர் வெற்றி பெற்றார். அது அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத்தந்தது. ஆனையிறவால் எப்போது எவர் பயணித்தாலும் பால்ராஜின் முகமே அப்போது நினைவுக்கு வரும். அதுதான் பால்ராஜ். யாராலும் மதிப்பிட முடியாத ஒரு அதிசய ஆற்றல் அவருடையது. அதனால் அவர் மக்களிடத்திலும் போராளிகளிடத்திலும் நட்சத்திர அந்தஸ்துடன் புகழ்பேற்றுத் திகழ்ந்தார்.



படைத்துறை ஆய்வாளர்களிடத்திலும் போரியலாளர்களிடத்திலும் பெரும் மதிப்பைப் பெற்றார். எதிரிகளும் வியக்கும் போர்த்திறனும் துணிச்சலும் அவருடையவை. பிரிகேடியர் பால்ராஜ் போர்த்திறன் வாய்ந்த மிக முக்கியமான ஆற்றலாளர். உலக இராணுவ வரலாற்றில் அவருக்கு என்றொரு தனியான அடையாளமுண்டு. தமிழ் வரலாற்றிலும் பால்ராஜைப் போன்ற இத்தகைய ஆளமைமிக்க திறனாளர் போர்த்துறையில் இல்லை. குறிப்பாக நவீன போர் வாழ்விலும் வரலாற்றிலும் தமிழர்கள் பால்ராஜைப் போன்றதொரு ஆளுமையைச் சந்தித்ததில்லை. விடுதலைப் புலிகளைப் பொறுத்தும் பால்ராஜைப் போன்றதொரு போரியலாளரை, போர்த்தளபதியை அவர்கள் கொண்டிருந்ததில்லை. புலிகளின் கடந்த முப்பதாண்டுகால போராட்டம் - போர் என்ற தொடரசைவில் பல நூற்றுக்கணக்கான போர்த்தளபதிகளும் போரியலாளர்களும் இருந்திருக்கிறார்கள். பலர் இப்போதும் இருக்கிறார்கள். ஆனால் இதிலெல்லாம் பால்ராஜ் முற்றிலும் வேறான ஒரு ஆளுமையே.

இப்போது இந்த ஆளுமை தமிழர்களை விட்டு மறைந்து விட்டது. தமிழர்கள் பெரும் போர்த்தளபதியை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இதுபோலவொரு இழப்பு இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் பால்ராஜ் தன்னுடைய இழப்பை ஒரு வெற்றிடமாக விட்டுச் செல்லவில்லை. பொதுவாகவே புலிகளின் மரபுப்படி எந்த இழப்பும் எத்தகைய வெற்றிடத்தையும் விடாது என்பதாக பால்ராஜின் இழப்பும் அத்தகைய வெற்றிடங்களை விடக்கூடாது என்பதற்காக அவரே அந்தச் சமநிலையை உருவாக்கியிருக்கிறார். இதை புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்கள் சொல்கிறார். அவர் தனது இரு தசாப்த கால வாழ்க்கையை முன்னெடுத்திருந்தார். அதாவது இந்த விடுதலைப் போராட்டம் ஒர் இராணு ரீதியான வடிவம் பெற்றதில் இன்று அதிகாரிகளாக அல்லது படைத்தளபதிகளாக தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றை முன்னகர்த்திக் கொண்டிருக்கும் போரியல் தளபதிகளை உருவாக்குவதில் அவர் தனது இருபது வருட காலத்திற்கு மேற்பட்ட போராட்ட வாழ்க்கையில் முழுமையாக உழைத்தார் என்று. இது மிகச் சரியான கூற்று. ஆனால் என்னதானிருந்தாலும் பால்ராஜைப் போன்றதொரு போரியல் ஆளுமையை தமிழர் தரப்பு பெற்றெடுப்பது அசாத்தியமே. இவருடைய இழப்பை யாராலும் மறக்க முடியாது. அவருடைய சாதனைகளைப்போலவே அதுவும் கனதியானது.

0 comments:

  © Blogger templates Psi by Ourblogtemplates.com 2008

Back to TOP