Sunday, January 3, 2010

கிளாலிப் படுகொலைகள்

யாழ்க் குடாநாடு சிங்களப் படையெடுப்புகளால் முற்றாகத் தனிமைப்படுத்தப்பட்டு பொருளாதாரத் தடை மருந்துத் தடை என முற்றிலும் இக்கட்டிலிருந்த காலப் பகுதி - ஈழத்தின் பிற பகுதிகளுடனான தொடர்பை ஏற்படுத்த குடாக்கடநீரேரியின் வழியாக தொடுவை என அழைக்கப்படும், பல படகுகளை தொடுத்து கயிற்றால் இணைத்து செலுத்தும் ஓடங்களின் பாவனையில் மக்களின் பயணங்கள் யாழைக் கடக்க ஏதுவாயிருந்தது. தொடுவையில் பயணிப்பது என்பது சாதரணமான சந்தோசமான பயணம் இல்லை. ஒரு படகில் பதினைந்து இருபது பேர் என தொடர்ந்து பிணைக்கப் பட்டிருக்கும் படகுகள் முன்னில் செல்லும் படகின் இயந்திர வலுவில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கும். படகில் ஏறின உடனேயே எம்மவர் வாய்கள் தெய்வங்களை மன்றாடத் தொடங்கி விடும். கரிய இருளில் - பரந்த குடாக்கடலில் இவ்வாறு சென்ற எம்முறவுகளை அன்றைய நாட்களில் தினம் தினம் கொன்றழித்தது சிங்கள கடற்படை. அவ்வுறவுகளின் நினைவுகளைச் சுமந்து வரும் இக்குறிப்பை இந்நாட்களில் பகிர்வோம். நாம் கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானது என்பதும் அதின் நோக்கம் என்ன என்பதையும் உணர்ந்து எம் சுதந்திர இலட்சியத்தை வென்றெடுப்போம்..

"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளுடன் தரைவழியாகத் தொடர்பு கொள்ளவென்று இருக்கும் ஒரேபாதை ஆனையிறவுவழியாகச் செல்லும் நெடுஞ்சாலைதான். இது கண்டிவீதியென்றும் ஏ-9 என்றும் வன்னியில் யாழ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. அதைவிட்டால் குடாநாட்டின் மேற்குப்பகுதியால் மன்னார் மாவட்டத்தின் பூநகரிக்குச் செல்லும் 'கேரதீவு - சங்குப்பிட்டி' என அழைக்கப்படும் பாதையொன்றுண்டு. அது முற்றிலும் தரைவழிப்பாதையன்று. இந்த இரண்டுபாதைகளுமே முறையே ஆனையிறுவுப் படைத்தளம், பூநகரிப் படைத்தளம் என்பவற்றால் மறிக்கப்பட்டிருந்தன. சண்டை தொடங்கியபின் மக்களுக்களின் போக்குவரத்துக்கிருந்த இரண்டு பாதைகளுமே மூடப்பட்டன. யாழ் குடாநாட்டிலிருந்து மக்கள் வெளிச்செல்லவோ உள்வரவோ மாற்றுவழிகளைத் தேடவேண்டிய நிலை.

முதலில் ஆனையிறவுக்கு கிழக்குப் பக்கமாக கொம்படி-ஊரியான் பாதையை மக்கள் பயன்படுத்தினர். இடுப்பளவு உயரத்தில் தேங்கிநிற்கும் நீருக்குள்ளால் சிறுபடகுகளில் கிட்டத்தட்ட ஐந்து மைல் தூரம் பயணித்து வன்னி சென்றடையவேண்டும். பின் தாண்டிக்குளம் வழியாக வவுனியா செல்ல வேண்டும்.

இராணுவத்தினர் ஆனையிறவிலிருந்து மேற்கொண்ட ஒரு முன்னேற்ற முயற்சியுடன் கொம்படி-ஊரியான் போக்குவரத்துப் பாதையும் மூடப்பட்டது. சும்மா விட்டுவிட முடியுமா? பாதையொன்றில்லாவிட்டால் யாழ்ப்பாணம் வாழாது. அன்றும்சரி, இன்றும்சரி இதுதான் நிலைமை. மாற்றுப்பாதையாக கிடைத்ததுதான் கிளாலிக் கடனீரேரிப் பாதை.


தென்மராட்சியிலுள்ள கிளாலி என்ற கடற்கரையிலிருந்து மறுதொங்கலில் பூநகரிக்கு அண்மித்த நல்லூர், ஆலங்கேணி போன்ற பகுதிகளுக்கு கடனீரேரியூடாகப் பயணிப்பதே அந்த மாற்றுவழி. கிளாலியிலிருந்து நல்லூரை நோக்கிப்போகும்போது இடப்பக்கம் ஆனையிறவுப் படைத்தளம், வலப்பக்கம் பூநகரி கூட்டுப்படைத்தளம். இரண்டுபக்கமிருந்துமே ஆபத்துத்தான். அதிலும் பூநகரி கூட்டுப்படைத்தளத்தின் அங்கமான நாகதேவன்துறை கடற்படைத்தளத்திலிருந்து மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டுதான் மக்களின் கிளாலிக் கடனிரேரிப் பயணம் நடந்தது.

தொடக்கத்தில் பூநகரி - நாகதேவன்துறை கடற்படைத்தளத்திலிருந்து வரும் கடற்படையினரால் பல தாக்குதல்கள் மக்கள்மேல் நிகழ்த்தப்பட்டன. பலர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர். அப் படுகொலைகளுள் அதிக எண்ணிக்கையான மக்கள் ஒரேதடவையில் கொல்லப்பட்ட சம்பவம்தான் 2 ஆம் திகதி 1993 ஜனவரியில் நடந்தது. அன்றைய படுகொலையில் ஐம்பது வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

கடற்படையினரில் நீடித்த படுகொலைகளால் மக்கள் அச்சமடைந்தாலும் கிளாலிக் கடனீரேரிப் பாதையை விட்டால் வேறு வழியில்லையென்ற நிலையில் தொடர்ந்தும் பயணித்தனர்.

இந்நிலையில் மக்கள்மீதான தாக்குதலை நடத்தும் கடற்படையினர் மீது விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் தாக்குதலொன்றை அதே கிளாலிக் கடற்பரப்பில் வைத்து நடத்தினர்.

26.08.1993 அன்று போக்குவரத்திலீடுபட்ட மக்களைத் தாக்கவென நாகதேவன்துறையிலிருந்து வந்த கடற்படைப் படகுகள் மீது கடற்புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இரு கரும்புலிப் படகுகள் கடற்படையினரின் இரு படகுகள் மீது மோதி அவற்றைத் தகத்து மூழ்கடித்தன. இத்தாக்குதலில் கரும்புலி மேஜர் வரதன், கரும்புலி கப்டன் மதன் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.


அன்றுடன் கிளாலிக் கடற்பரப்பில் நிலைமை மாறியது. மக்களுக்கான பாதுகாப்பை கடற்புலிகள் வழங்கினர். மக்களைத் தாக்கவென வந்த கடற்படையினருடன் சில சண்டைகள் நடைபெற்றன. இக்கடல்வழிப் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் சாள்ஸ், மக்களுக்கான பாதுகாப்புச் சமரொன்றில் அதே கிளாலிக் கடற்பரப்பில் வீரச்சாவடைந்தார்.

1993 நவம்பரில் பூநகரி கூட்டுப்படைத்தளம் மீது 'தவளைப் பாய்ச்சல்' என்ற பேரில் பெரும் நடவடிக்கையொன்றை புலிகள் மேற்கொண்டு அத்தளத்தை அழித்துப் பின்வாங்கினர்.



அதன்பின் சீராக, ஆபத்தின்றி கிளாலிக் கடற்பயணம் தொடர்ந்தது. யாழ்-வலிகாம இடப்பெயர்வைத் தொடர்நது பெருமளவான மக்கள் வன்னிக்கு வந்ததும் இதே பாதைவழியாற்றான். 1996 இன் தொடக்கத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு முற்றாகப் படையினரிடம் வீழும்வரை கிளாலிக் கடற்பரப்பால் பயணங்கள் ஆபத்தின்றி நடந்தவண்ணமேயிருந்தன.

0 comments:

  © Blogger templates Psi by Ourblogtemplates.com 2008

Back to TOP